தஞ்சையில் 600 ஆண்டுகள் பழமையான சமண கோயிலில் 8 சிலைகள் திருட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2020 08:01
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தையில் உள்ள 600 ஆண்டுகள் பழமையான கோயிலில் உலோகச் சிலைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் என்கிற சமண கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (19ம் தேதி) காலை பின்புறக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், கோயிலில் இருந்த 3 அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதீஸ்வரர் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயர ஜினவாணி என்கிற சரஸ்வதி, ஜோலமணி, அரை அடி உயர நதீஸ்வரர் சிலை, ஒரு அடி உயர பஞ்சநதீஸ்வரர் சிலை, முக்கால் அடி உயர நவக்கிரக தீர்த்தங்கரர், நவ தேவதா சிலைகள், தாமிரத்தில் செய்யப்பட்ட ஒரு அடி உயர 24வது தீர்த்தங்கரர் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் நள்ளிரவில் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தகவலறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இக்கோயிலில் 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் இரு கேமராக்களில் காட்சிகள் தெளிவாகப் பதிவாகாத அளவுக்கு மர்ம நபர்கள் ஸ்பிரேயர் அடித்துள்ளனர். இதனால், இக்கேமராக்களில் காட்சிகள் தெளிவாக இல்லை. மற்றொரு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.