பதிவு செய்த நாள்
19
ஜன
2020
08:01
பல்லடம்: பல்லடம் அருகே அமைந்துள்ள அதர்வன பத்ரகாளி கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
பல்லடத்தை அடுத்த நல்லூர்பாளையத்தில், 18 அடி உயரமும், 18 கைகள், மற்றும் கபால மாலைகள் கொண்ட, ஸ்ரீ அதர்வன பத்ரகாளி சிலை, இரண்டு மாதங்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் கும்பாபிஷேகம், கடந்த டிச., 1ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து, 48 நாட்கள் நடைபெற்று வந்த மண்டல பூஜை, நேற்று நிறைவு பெற்றது. மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு, பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் உள்ளிட்ட, 18 தீர்த்தங்களால் வனபத்ரகாளிக்கு அபிஷேகம் நடந்தது. 48 பூவோடுகள் கோவிலை சுற்றி வலமாக கொண்டு வரப்பட்டு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கும் பூஜைகள் நடந்தன. கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று, விழாவை நடத்தி கொடுத்தார். சிறப்பு அலங்காரத்துடன் அதர்வன பத்ரகாளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.