பதிவு செய்த நாள்
20
ஜன
2020
10:01
ஆலப்புழா: கேரளாவில், மசூதியில், ஹிந்து முறைப்படி, ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர், பிந்து. இவரது கணவர் அசோகன் இறந்து விட்டார். இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் உள்ளார். தன் கணவர் அசோகன் இறந்தபின், மிகவும் கஷ்டப்பட்டு, வாழ்க்கை நடத்தி வருகிறார், பிந்து. இந்நிலையில், தன் மகள் அஞ்சுவுக்கும், சரத் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க, பிந்து ஏற்பாடு செய்தார். திருமண செலவுக்கு பணம் இல்லாததால், செருவாலி முஸ்லிம் ஜமாத்தின் செயலர், நிஜுமுதீன் அலுமூட்டிலிடம், உதவி கேட்டார். இது பற்றி, ஜமாத் நிர்வாகிகளுடன், அலுமுட்டி ஆலோசனை நடத்தினார். பிந்துவின் மகள் திருமணத்துக்கு உதவ, ஜமாத் சம்மதித்தது.
அஞ்சுவுக்கு, 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு பொருட்களும், ஜமாத் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அஞ்சுவின் திருமணத்தை, மசூதி வளாகத்திலேயே, ஹிந்து முறைப்படி நடத்த, அப்போது முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜன.,19) காலை, செருவாலி மசூதியில், அஞ்சுவுக்கும், சரத்துக்கும், ஹிந்து முறைப்படி, வேத மந்திரங்கள் முழங்க, திருமணம் நடந்தது. திருமணத்துக்காக, ஜமாத் சார்பில், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, சைவ உணவு விருந்து தயாரிக்கப்பட்டது.
திருமணத்தில், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பெரும் அளவில் பங்கேற்று, விருந்து சாப்பிட்டு, மணமக்களை வாழ்த்தினர். மசூதியில் ஹிந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு, முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.பேஸ்புக் சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக, கேரளா எப்போதும் விளங்குகிறது. மதத்தின் பெயரால், மக்களை பிளவுப்படுத்தும் முயற்சி நடந்து வரும் வேளையில், இந்த திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என, கூறியுள்ளார்.