திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நடந்த ஆற்று திருவிழாவில், திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நடந்த தீர்த்தவாரி திருவிழாவிற்கு நேற்று காலை 8:00 மணியளவில், ஏரிக்கரை மூலையிலுள்ள இரட்டை விநாயகர் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு பெண்ணையாற்றில் வந்தடைந்தார். தொடர்ந்து கீழையூர் வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர், வீரப்பாண்டி அதுல்யநாதேஸ்வரர் சுவாமிகள் தென்பெண்ணையில் எழுந்தருளி ஒருசேர தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகள் தனித்தனி பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவை காண திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.