பதிவு செய்த நாள்
20
ஜன
2020
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப மை பிரசாதம், பாக்கெட் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில், 2,668 அடி உயர மலை உச்சியில் டிச., 10ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது.இதற்காக, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தி, 5.5 அடி உயர கொப்பரையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த கொப்பரையில் சேகரிக்கப்பட்ட, மஹா தீப மை பிரசாதம், ஜன., 10ல், ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு முதலில் சாற்றப்பட்டது. பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, கொப்பரையில் சேகரிக்கப்பட்ட தீப மையுடன், பல்வேறு மூலிகைகள் சேர்த்து, அதனுடன் சுவாமி அபிஷேக விபூதி, வாசனை பொருட்களான ஜவ்வாது, அரகஜா, ரவுசான் போன்றவை சேர்த்து, மஹா தீப மை பிரசாதம் தயாரிக்கப்பட்டது.இதை, பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, பாக்கெட் செய்யும் பணி நடக்கிறது. மஹா தீபம் ஏற்ற, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, 10 கிராம் தீப மை பிரசாதம், விபூதி, மற்றும் குங்கும பிரசாதம் அடங்கிய பாக்கெட், இலவசமாக வழங்கப்படும்.மற்ற பக்தர்கள், 10 ரூபாய் செலுத்தி, கோவில் நிர்வாகத்திடம் பெற்று கொள்ளலாம். தீப மை பிரசாதம் மூலம் ஆண்டுக்கு, 25 முதல், 30 லட்சம் ரூபாய் வரை, கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.