பதிவு செய்த நாள்
20
ஜன
2020
11:01
கிருஷ்ணகிரி: மழை வேண்டி, வனதுர்க்கை கங்கம்மாவுக்கு கூழ் ஊற்றி, ஆடு பலியிட்டு கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ணகிரி ஒன்றியம், கல்லுக்குறுக்கி பஞ்., மலையோரம் கொல்லப்பட்டி கிராம மக்கள், மலைக்குகையில் உள்ள வனதுர்க்கை கங்கம்மா சுவாமியை, 300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வந்தனர். இந்த சுவாமி சிலைக்கு அருகில், இயற்கை நீரூற்றில் இருந்து, எப்போதும் வற்றாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால், சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. ஆனால் கடந்த, 35 ஆண்டுகளாக வனதுர்க்கை கங்கம்மாவை கிராம மக்கள் வழிபடாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், தற்போது ஏரி, குளங்களில் தண்ணீரின்றியும், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. எனவே மழை வேண்டியும், ஏரிகளில் தண்ணீர் நிரம்ப வேண்டியும், வனதுர்க்கை கங்கம்மாவுக்கு கூழ் ஊற்றி, ஆட்டை பலியிட கிராம மக்கள் முடிவெடுத்தனர். அதன்படி, நேற்று காலை கிராம மக்கள் கூழ் சுமந்து, மேள தாளத்துடன் கங்கம்மா கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு வனதுர்க்கை கங்கம்மாவுக்கு அபிஷேக, அலங்காரம் செய்து, பொங்கல் படையலிட்டு, ஆட்டை பலியிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் ஆட்டை அங்கேயே சமைத்து, கிராம மக்கள் அனைவருக்கும் விருந்தளித்தனர். இதனால், கிராமத்தில் மக்கள் இன்றி வெறிச்சோடியது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், அம்மனுக்கு கூழ் ஊற்றி, ஆட்டை பலியிட்டு படையல் வைத்துள்ளோம். இதனால் மழை பெய்து, ஏரி, குளங்கள் நிரம்பும் என நம்புகிறோம். இனி ஒவ்வொரு ஆண்டும் அம்மனுக்கு திருவிழா நடத்த முடிவெடுத்துள்ளோம், என்றனர்.