பதிவு செய்த நாள்
20
ஜன
2020
12:01
உடுமலை;உடுமலை, ஆல்கொண்டமால் கோவிலுக்கு, 43 கால்நடைகளை விவசாயிகள் தானமாக வழங்கி வழிபட்டனர்.உடுமலை அருகேயுள்ள சோமவாரப்பட்டியில், கால்நடைகளை காக்கும் தெய்வமாகவும், வேளாண் வளம் செழிக்கவும், வேண்டியவருக்கு வேண்டியதை அருளும், ஆல்கொண்டமால் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டுத்திருவிழாவாக, தை பொங்கல், தமிழர் திருநாள் திருவிழா, கடந்த, 16ம் தேதி துவங்கியது. சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, பல லட்சம் விவசாயிகள் கோவிலுக்கு வந்து, தங்களது மாடுகளிலிருந்து கறந்த பாலை கொண்டு வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.இரண்டு நாட்களாக, நாள் முழுவதும் அபிஷேகம், பக்தர்கள் கூட்டம், திருவிழா கடைகள், பொழுது போக்கு அம்சங்கள் என களைகட்டியுள்ளது.மார்கழி மாதம் முழுவதும் இரவு நேரங்களில், ஊருக்கு பொதுவாக உள்ள, சலகெருதுகளுடன் விளையாடி, கடந்த இரு நாட்களாக, அன்று, மாலகோவிலுக்கு கிராம மக்கள் ஊர்வலமாக வந்து, வழிபட்டனர்.கால்நடை வளம் சிறக்கவும், கால்நடைகளை நோய் தாக்காமல் இருக்கவும், நேர்த்திக்கடனாகவும் உருவாரங்களை, சுவாமிக்கு வைத்து வழிபாடு செய்தனர்.தை பொங்கல் முதல் நாள் அன்று பிறக்கும் கன்றுகள், ஆல்கொண்டமாலுக்கு சொந்தம் என, கால்நடைகளை தானமாக வழங்குவதையும் பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.இந்தாண்டு திருவிழாவில், கடந்த இரு நாட்களில், 2 பசு, 2 காளை, 13 கிடாரி கன்றுகள், 19 காளை கன்றுகள், 5 வெள்ளாடு, 5 செம்மறி ஆடு என, 43 கால்நடைகளை கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றை, பெற்றுக்கொண்ட கோவில் நிர்வாகிகள், கோசாலை அமைத்து பராமரித்து வருகின்றனர்.