பதிவு செய்த நாள்
21
ஜன
2020
01:01
சென்னை: ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக, பம்மலில் நேற்று, விவேகானந்தர் நடைப்பயணம் நடந்தது.
இதில், ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து, ஆண்டுதோறும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை நடத்தி வருகிறது. இதன், 11வது கண்காட்சி, வேளச்சேரி குருநானக் கல்லுாரியில், 28ம் தேதி துவங்குகிறது.பெண்மையைப் போற்றுதல் என்ற மையக் கருத்தின் அடிப்படையில் நடத்தப்படும் கண்காட்சியை, மாதா அமிர்தானந்தமயி துவக்கி வைக்கிறார்.வரும், 29ம் தேதி முதல், பிப்ரவரி, 3ம் தேதி வரை, ஆறு நாட்கள் கண்காட்சி நடத்தப்படுகின்றன.கண்காட்சி குறித்து பொதுமக்களிடம் விளக்கும்வகையில், பல முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன், ஒரு பகுதியாக விவேகானந்தர் நடைப்பயணம் பம்மலில், நேற்று நடந்தது. பம்மல், தனியார்பாலிடெக்னிக் முன் துவங்கி, சங்கரா பள்ளியில் நடைபயணம் நிறைவடைந்தது.இதில், விவேகானந்தர் போன்று முக கவசமும், உடையும் அணிந்து, 2,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்று, கண்காட்சி கருத்துக்களை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி வலம் வந்தனர்.