பதிவு செய்த நாள்
21
ஜன
2020
01:01
சென்னை:அனைத்து கோவில்களிலும், தமிழ் இருக்க வேண்டும் என்பது, அரசின் கொள்கை முடிவு. ஆனால், இன்னொரு மொழி இருக்கக் கூடாது என்பதில், எங்களுக்கு விருப்பம் கிடையாது, என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: கன்னியாகுமரியில் உள்ள, திருவள்ளுவர் சிலையை பராமரிக்க, செய்தித் துறை அமைச்சர் ராஜு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திருவள்ளுவர் புகழுக்கு எந்த பங்கமும் ஏற்படாத வகையில், அரசு பார்த்துக் கொள்ளும்.தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விவகாரத்தில், அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நல்ல முடிவு எடுப்பார். தமிழுக்கு கோவிலில் முதன்மை இடம் வழங்க வேண்டும் என, தமிழ் துறை சார்பில், கோரிக்கை விடுத்துள்ளோம். ஆகம விதிகளில் எவ்வித மாறுபாடும் இல்லாமல், தமிழுக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும்; இதை, அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்து கோவில்களிலும், தமிழ் இருக்க வேண்டும் என்பது, அரசின் கொள்கை முடிவு. ஆனால், இன்னொரு மொழி இருக்கக் கூடாது என்பதில், எங்களுக்கு விருப்பம் கிடையாது. சமஸ்கிருதத்தில் வழிபாடு இருக்கும் இடங்களில், அதை மாற்றி, தமிழ் இருக்க வேண்டும் என்று, நாங்கள் சொல்லவில்லை. சமஸ்கிருதமும் இருக்கும்; தமிழும் இருக்கும் என்பது, அரசின் நிலைப்பாடு.இவ்வாறு, அவர் கூறினார்.