பதிவு செய்த நாள்
25
ஜன
2020
11:01
திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணியால், மாடவீதிகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது, மாசி பிரம்மோற்சவ தேர் திருவிழாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.திருப்போரூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.வீடுகள் மற்றும் வணிக கடைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக வெளியேற்றப்படாமல் குளம், ஏரிகளில் விடப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதிக்கப்பட்டது.வீதியுலாஇதனால், 53 கோடி ரூபாய் மதிப்பில், திருப்போரூர் பகுதிகளில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி, ஓராண்டாக நடந்து வருகிறது.இதற்காக, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலை நடுவே, 10 அடியில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்படுகின்றன.அவ்வாறு, குழாய்கள் பதிக்கப்பட்ட சாலையில், ஆங்காங்கே பள்ளம், மேடாக இருக்கிறது; சில இடங்களில் புதைகுழியாகவும் உள்ளது.குறிப்பாக, கந்தசுவாமி கோவில் மேற்கு மாடவீதியாகவும், ஓ.எம்.ஆர்., சாலையாகவும் அமைந்துள்ள பிரதான சாலையில், மெகா பள்ளம் - மேடு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், வணிக கடையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.இது ஒருபுறம் இருக்க, வரும் பிப்ரவரி மாதத்தில், கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா நடைபெற உள்ளது.இதில், பிரதான விழாவான தேரோட்டத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் கந்தசுவாமி வீதியுலா வருவார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து நான்கு மாடவீதிகளில் வலம் வருவர்.இந்நிலையில், பாதாள சாக்கடை பணியால், நான்கு மாடவீதிகளிலும் பள்ளம் ஏற்பட்டு சாலை, கரடு முரடாக உள்ளது.சேதமடைந்த சாலையை, பிரம்மோற்சவத்திற்கு முன் சீரமைக்க வேண்டும் அல்லது புதிய சாலை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.திட்டம்இந்நிலையில், திருப்போரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன், திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர், கோவில் நிர்வாக பணியாளர்கள், மாடவீதிகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை, நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.மாசி பிரம்மோற்சவத்திற்காக, நான்கு மாடவீதிகளிலும், அரசு நிதி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிமென்ட் அல்லது தார் சாலை அமைக்க, பொதுப்பணித் துறை நிர்வாகம் திட்டமிடப்பட்டு வருகிறது.மேலும், மேற்கு மாடவீதி, பிரணவமலை நுழைவாயில் அருகே, உயர்கோபுர மின் விளக்கு அமைக்கவும் முடிவாகிஉள்ளது.