ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மற்றும் தங்க கருட வாகனத்தில் ராமர், சீதை, லெட்சுமணர் அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளினர். பக்தர்களுக்கு தீர்த்த வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பக்தர்கள் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி கோயில் அக்னி தீர்த்த கரையில் திதி கொடுத்தனர். இதையடுத்து பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.