திருநெல்வேலி : தமிழகத்தில் முதல் முறையாக திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் லட்ச தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேரில் கோவில் விளக்குகளை ஏற்றி தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லையப்பர் கோவிலில் 6 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் லட்ச தீப விழா புதுமையான தீபங்களுடன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த ஆண்டு தமிழகத்திலேயே முதல்முறையாக முப்பரிமாண அலங்கார விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் தை அமாவாசையில் பத்ர தீப விழா நடைபெறும். ஆனால் 6 ஆண்டுக்கு ஒரு முறையே லட்ச தீப விழா நடைபெறும். 11 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 13ம் தேதி காலை கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சி லட்ச தீப விழா வெள்ளிக்கிழமையான இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் முன்னமே தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மிக பிரம்மாண்டமான விஷேச அலங்கார முப்பரிமாண விளக்குகள் கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக நெல்லையப்பர் கோவிலில் சுவாமி சன்னதி முன்பு இருக்கும் சொர்ண விளக்கான தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டு பின் அந்த விளக்கில் இருந்து தீபம் கொண்டு வரப்பட்டு நந்தி சிலை முன் இருக்கும் மகாநந்தி விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் பிரகாரங்களில் அனைத்திலும் விளக்குகள் ஏற்றப்பட்டது. சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் லட்ச தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது. இந்த ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக தை அமாவாசை தினத்தன்று நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் லட்சதீப விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு இருக்கிறது. இதற்காக புதிய பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 12 அடி உயரமுள்ள சுழலும் வகையில் கூம்பு வடிவ அலங்கார விளக்கு வரிசை, 18 அடி உயரம் கொண்ட மூன்று கோள வடிவிலான சுழலும் வரிசை தீப விளக்குகள், 8 அடி உயரம் கொண்ட ராட்டினம் போன்று அமைந்த சுழலும் தீப விளக்கு வரிசை திருக்கோவிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் வாசல் பகுதிகளில் ஏற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த மூன்று நாட்கள் விழாவை முன்னிட்டு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பக்தி சார்ந்த இயல் இசை நாடகங்கள் நடைபெற்றன.இந்த லட்சதீப விழாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நேரில் கண்டு தரிசனம் செய்தனர்.