சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதணை நடந்தது. 12:00 மணிக்கு சுவாமி வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்புவனம்: தை அமாவாசை,புரட்டாசி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற தினங்களில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இந்துக்கள் தர்ப்பணம் கொடுத்து வைகையில் நீராடி செல்வது வழக்கம். நேற்று தை முதல் அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமானோர் வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர். திதி, தர்ப்பணம் கொடுத்த பின் ஏழைகளுக்கு உணவும், பசு உள்ளிட்ட கால்நடைகளுக்கு அகத்தி கீரையும் வழங்கி வழிபட்டனர்.