மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள திருநாங்கூர் திவ்ய தேசத்தில் 11 தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருநாங்கூரில், ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள், 11 கருடசேவை உற்சவம் நடைபெறும். இவ்வாண்டு கருட சேவை உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றதுஅதையொட்டி, திருநகரி கல்யாண ரங்கநாதர் கோவிலில் இருந்து திருமங்கையாழ்வார் புறப்பட்டு, திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருட சேவைக்கு பெருமாள்களை அழைப்பார். அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும் நாங்கூர் மணிமாடக் கோவிலில் எழுந்தருளினர்.
கோவில் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் 11 பெருமாள்களுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 12.30 மணிக்கு மணிமாட கோவில் ராஜகோபுர வாசலில் மணவாள மாமுனிகள், ஹம்ச வாகனத்தில் குமுதவல்லி தாயாருடன் திருமங்கையாழ்வார், 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாளுக்கு கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு, தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இரவு 1.30 மணிக்கு 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்தனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.