பதிவு செய்த நாள்
27
ஜன
2020
10:01
சென்னை: ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு, 2,000 மாணவியரின் நாட்டிய நடன நிகழ்ச்சி, மீனம்பாக்கத்தில் நேற்று நடந்தது.
ஹிந்து ஆன்மிக சேவை அறக்கட்டளை மற்றும் பண்பு கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை இணைந்து, 11வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி, நாளை மறுநாள், வேளச்சேரியில் துவங்குகிறது.இதையொட்டி, பொதுமக்களை கவரும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மீனம்பாக்கம், ஏ.எம்.ஜெயின் கல்லுாரி வளாகத்தில், பரதமுனி சம்ஸ்கார நடனம் என்ற தலைப்பில், பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி, நேற்று நடந்தது.பள்ளி, கல்லுாரி மற்றும் நடனப் பள்ளிகளைச் சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட மாணவியர், ஆறு பண்புகளை வலியுறுத்தி பரதம் ஆடினர்.அதோடு, ஆன்மிக கண்காட்சியின் அடிப்படை கருத்துகளை வலியுறுத்திய பாடல்களுக்கும், பெண்கள் நடனமாடினர்.மேலும், மைத்ரீம் பஜத மற்றும் ஈசா வாஸ்யம் இதம் சர்வம் ஆகிய பாடல்களுக்கு, மாணவியர் நடனம் ஆடினர்.அதோடு, நாட்டுப்பற்று, வீரம், ஜீவராசிகள் மீது காட்டும் பரிவு என, பாடல் வரிகளுக்கு ஏற்ப, முகபாவனைகளுடன் ஆடிய நடனம், பார்வையாளர்களை மெய்சிலிக்க வைத்தது.இந்நிகழ்ச்சியை, பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை நிர்வாகி ராஜலட்சுமி மற்றும் ராம்ஜி, பத்மாசுப்பிரமணியம் முன்னின்று நடத்தினர்.