பதிவு செய்த நாள்
27
ஜன
2020
11:01
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. பிப்., 4தெப்பத் திருவிழா நடக்கிறது.
இதையொட்டி ஜன., 25 மாலை கம்பத்தடி மண்டப அனுக்ஞை விநாயகர் முன் அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று காலை திருவாட்சி மண்டபத்தில் விநாயகர், சீவிலி நாயகர் முன் ரிஷப யாகம் முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். சிவாச்சார்யார்களால் கொடியேற்றப்பட்டு, திரவிய அபிஷேகங்கள் நடந்தன.
நம்பியார் செல்லப்பா சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. விழா நடக்கும் பிப்., 2 வரை தினம் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வர். முக்கிய நிகழ்வாக பிப்., 3 காலை தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி முடிந்து, 16கால் மண்டபம் முன் உள்ள சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி தேரோட்டம் நடக்கும். பிப்., 4 காலை ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளம் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி திருவிழா நடக்கும்.