சிவகங்கை : சிவகங்கை அருகே திருமலை குடவரை கோயில் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு பெற்ற இடங்களை பள்ளத்துார்சீதாலட்சுமி மகளிர் கல்லுாரி மாணவிகள் ஆய்வு செய்தனர்.
இக்கல்லுாரி வரலாற்றுத்துறை மாணவிகள் சிவகங்கை அருகே திருமலை மலைக் கொழுந்தீஸ்வரர் குடவரைகோயில், சமணர் படுகை, 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம், தமிழி எழுத்துக்களை கண்டறிந்தனர். இங்குள்ள 8ம் நுாற்றாண்டு பாண்டியர்கால குடைவரை கோயில், 12ம் நுாற்றாண்டு சடையவர்மன் குலசேகர பாண்டியன் கால சிவன்கோயில் மற்றும் சோழபுரம் சுத்தானந்த பாரதி தவக்குடிலை பார்வையிட்டனர். சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெயக்கீர்த்தியின் ஒரு பகுதி அடங்கிய கல்வெட்டு, இந்திய தொல்லியல் அளவீட்டு துறை கல்வெட்டுக்களை கண்டறிந்து, பதிவு செய்துள்ளனர். காளையார்கோவில் அருகே நல்லேந்தலில் கல் வட்டங்களை வியப்புடன் பார்வையிட்டு, வரலாற்று கல்விக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டனர். வரலாற்று துறை தலைவர் ரோஜா, பேராசிரியைகள் ரேணுகாதேவி, சாந்தி, விமலா ஆகியோர் பங்கேற்றனர். தொல்லியல் ஆய்வாளர் காளிராஜா ஏற்பாட்டை செய்திருந்தார்.