பதிவு செய்த நாள்
29
ஜன
2020
10:01
புதுடில்லி : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை ஒரு வாரத்துக்குள் அமைக்கப்படும் என, தெரிகிறது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு, நவ.,9ல் தீர்ப்பு அளித்தது. இந்த நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம். அதற்கான வழிமுறைகளை வகுக்க ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மேலும், அயோத்தியில் வேறொரு இடத்தில், மசூதி கட்டுவதற்காக, சன்னி வக்பு வாரியத்துக்கு, ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையை அமைக்க, மூன்று மாத அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, இந்தப் பணியில், மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. அறக்கட்டளை அமைப்பது தொடர்பாகவும், மசூதி அமைக்க நிலம் ஒதுக்குவது தொடர்பான திட்டமும் இறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, ஒரு வாரத்துக்குள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.