வீரபாண்டி: தைப்பூசத்துக்கு, தேர்களை சுத்தம் செய்து, சாரம் கட்டும் பணி நடந்து வருகிறது. சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச திருவிழா, பிப்., 4ல் கொடியேற்றத்துடன் தொடங்கும்.
7ல் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம், அன்றிரவு, 12:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் முடிந்து, காலை சர்வ அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமி, தேருக்கு புறப்படுவார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், பிப்., 8ல் நடக்கவுள்ளது. காலை, 6:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சுவாமி தேரில் எழுந்தருளச்செய்வர். மதியம், 3:00 மணிக்கு, பக்தர்கள் வடம்பிடித்து, தேரை இழுத்து வருவர். 10ல் சத்தாபரணம், 11ல் வசந்த உற்சவத்துடன், தைப்பூச திருவிழா நிறைவடையும். அதையொட்டி, கோவில் முன் இரு தேர்களையும் கொண்டு வந்து நிறுத்தி, சுத்தம் செய்து, சாரங்கள், வடசங்கிலி பொருத்தும் பணியில், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் முருகன், பரம்பரை அறங்காவலர் சந்திரலேகா செய்து வருகின்றனர்.