சென்னை: தஞ்சாவூரில் காணாமல் போன திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் சவுந்தரராஜா பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமங்கை ஆழ்வார் உலோகச் சிலை பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து கோவிலின் செயல் அலுவலர் ராஜா சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். முதற்கட்ட வழக்கு விசாரணையில் காணாமல் போன சிலையின் ஆவண புகைப்படமும் இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள அஸ்மோலியன் மியூசியத்தில் உள்ள திருமங்கை ஆழ்வாரின் சிலையும் 100 சதவீதம் ஒன்றுபோல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து சிலை மீட்கப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.