மடப்புரம் காளி கோயில் சிற்பங்கள் சேதம்: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2020 10:02
திருப்புவனம்: திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமடைந்து இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம், கேட்ட வரம் தருபவள், துரோகம், நம்பிக்கை மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை அம்மன் தண்டிப்பார் என்ற கருத்து இருப்பதால் பலரும் கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம்.
மடப்புரம் கோயிலுக்கு 16 வருடங்களுக்கு பிறகு கடந்த 2017 ஜூன் 4ம் தேதி கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. 16 வருடங்களுக்கு பிறகு நடந்த கும்பாபிேஷகம் என்பதால் கோயில் வளாகம் முழுவதும் திருப்பணிகள் பக்தர்களின் நன்கொடை மூலமாக நடந்தது. கோயிலின் கோபுர வேலைகள், வளாகம் முழுவதும் உள்ள சிலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன. மூன்று ஆண்டுகளிலேயே கோயில் வளாகத்தில் உள்ள சில சிலைகள் சேதமடைந்துவிட்டன. கோயில் கோபுரத்தில் உள்ள சிலைகள் சேதமடைந்து காட்சியளிப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். பக்தர்கள் கூறியதாவது: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள், ஆனால் கோபுரத்தில் உள்ள பல சிலைகள் சேதடைந்து காட்சியளிக்கின்றன.
குதிரை சிலைகள், சாமி சிலை சேதமடைந்தும் வர்ணங்கள் மங்கி காட்சியளிக்கின்றன. கோயிலில் மாதந்தோறும் உண்டியல் மூலமாக 30 முதல் 40 லட்ச ரூபாய் வரை வசூலாகும் நிலையில் கோயில் கோபுரம் சிதிலமடைந்திருப்பது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கோயில் கோபுர பணிகளை தரமான முறையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.