பதிவு செய்த நாள்
14
பிப்
2020
12:02
சென்னிமலை: சென்னிமலை, முருகன்கோவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதரிசனத்தில், வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி வலம் நடந்தது. விடிய,விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நேற்று இரவு நடந்தது. முன்னதாக காலை, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், 5,000 கிலோ மலர்களாகல் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணியரும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் நந்தகுமார், செயல் அலுவலர் அருள்குமார் செய்தனர்.
* சென்னிமலை, முருகன் கோவில் திருப்புகழ் பாடிய அருணகிரி நாதருக்கு, முருகப்பெருமான் தோன்றி படிகாசு வழங்கியது; பாலதேவராய சுவாமிகள் கந்தர்சஷ்டி கவசம் அரங்கேற்றிய திருத்தலம் என வரலாற்று சிறப்பு மிக்கது. கடந்த, 84ம் ஆண்டு பிப்.,12ல் மலையில் உள்ள, 1,320 படிகள் வழியாக இரண்டு எருதுகள் பூட்டிய மாட்டு வண்டி மலை ஏறிய அதிசயம் நடந்தது. வேட்டுவபாளையம் பெரிய பூசாரி என்ற பழனிசாமிதான், மாட்டு வண்டி மீது அமர்ந்து வண்டியை ஓட்டினார். அவரின் வழி தோன்றல் பொன்னுசாமி பூசாரியார், தற்போது அவர் செய்து வந்த பல பூஜைகளை முன்னின்று நடத்தி வருகிறார். அவர் சார்பாக, மாட்டு வண்டி மலை ஏறி, 37ம் ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விதமாக, நேற்று முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.