பதிவு செய்த நாள்
15
பிப்
2020
11:02
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இரும்பு அச்சுக்களுடன் பிரேக்குடன் கூடிய சக்கரங்கள் அமைத்து, அதிநவீன தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய தேர் வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியில் அண்ணா நகர் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கக்கூடிய பல்வேறு அளவுகளில் சிற்ப வேலைப்பாடுகளுடன் தேர் செய்யும் பணிகளில் பிரகாஷ், 45; என்பவர் ஈடுபட்டுள்ளார்.இங்கு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கரை அடி அகலம், 21 அடி உயரம் கொண்ட தேர் முதல் பன்னிரெண்டரை அடி அகலத்தில் 37 அடி வரையிலான பிரம்மாண்ட தேர்களையும், சக்கரங்களையும் சுலபமாக வளைக்கும் வகையிலும், பிரேக் பிடிக்கும் அதி நவீன தொழில்நுட்பத்துடனும் வடிவமைத்து தரப்படுகிறது.
புதிய தொழில்நுட்பத்தில் புதிய தேர் வடிவமைப்பது போன்றே பழுதான பழமையான தேர்களையும் அதன் வடிவம் மாறாமல் மர அச்சுக்களை மாற்றி, இரும்பில் வடிவமைக்கப்பட்ட மிக சக்தி வாய்ந்த இரும்பு அச்சுக்களை பொருத்தி தயார் செய்கின்றனர்.திருச்சி பெல் நிறுவனத்திற்கு அடுத்தாற்போல் தமிழகத்திலேயே இரண்டாவதாக கள்ளக்குறிச்சியில் இரும்பினாலான தேர்ச்சக்கரங்கள் இங்கு தயார் செய்யப்படுகிறது.இந்த சக்கரங்கள் ஒரு இன்ச் முதல் அரை இன்ச் வரையிலான தடிமன் கொண்ட தகடுகளை வளைத்து உள்ளே இரும்புக்கம்பிகளை சட்டமாக அமைத்து சக்கரங்கள் செய்யப்படுகிறது.
புதிதாக வடிவமைத்த தேராக இருந்தாலும், பழைய தேர்களை புதிப்பித்தாலும் தேர்கள் விற்பனைக்குப் பின் மூன்று ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிக்கும் பணிகளையும் இவர்கள் மேற்கொள்கின்றனர்.கோயம்புத்துார் மாவட்டம், பட்டீஸ்வரம் பச்சையம்மன் கோவிலில் இவர்கள் வடிவமைத்த 37 அடி உயரம் கொண்ட பெரிய தேர் தற்போது அங்கு பவனி வந்து கொண்டிருக்கிறது. பன்னிரண்டரை அடி அகலத்துடன், 37 அடி உயரத்துடன் பட்டீஸ்வரம் பகுதிக்கென்று இவர்கள் இந்த தேரை அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துள்ளனர்.
இதுவே இவர்களின் மிகப்பெரிய படைப்புக்கு உதாரணமாக இருந்து வருகிறது.கட்டமைப்புகள் அனைத்தும் முடிவுற்றபின் இந்த தேர்களை எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு இரும்பு அச்சுக்களில் லாரி டயர்களை பொருத்தி தேவைப்படுவோர்களின் பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு தேரோடும் வீதிகள் வழியாக தேர்களை சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கின்றனர். அண்ணாநகர், ஏமப்பேர், தச்சூர் ஆகிய 3 இடங்களில் தேர் செய்யும் பணி நடைபெற்றாலும், தேர்களை அந்தந்த பகுதிகளுக்கே சென்று தயாரித்துக்கொடுக்கும் கட்டமைப்புகளையும் இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.