நத்தம் மாரியம்மன் மாசித் திருவிழா: பிப்.24 ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2020 03:02
நத்தம்:நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா பிப்.24 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இக்கோயில் விழாவையொட்டி பிப்.,25ம் தேதி, உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் கோயிலில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து, காப்பு கட்டி விரதம் துவங்குவர். அன்று இரவு அம்மன் குளத்தில் நகர்வலமாக எடுத்துவரப்படும் கம்பம், கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படும். பிப்.28 அன்று இரவு அம்மன் மயில் வாகனத்தில் நகர்வலம் செல்வார்.அம்மன் நகர் வலம் மார்ச் 2 ல் தேர் சட்டம் போடும் நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் அம்மன் சிம்ம வாகனத்தில் நகர்வலம் செல்வார். மார்ச் 6ம் தேதி காலை பூக்குழி கண் திறக்கப்படும். அன்று இரவு மின் அலங்கார ரதத்தில் அம்மன் அன்ன வாகனத்தில் நகர்வலம் செல்வார். மார்ச் 8 அன்று பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, மறுநாள் அம்மனுக்கு மஞ்சள் பாவாடை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை அருள்மணி பொங்கல் வைத்து மாவிளக்கு எடுப்பர்.
பூக்குழி இறங்குதல்: மார்ச் 10 அன்று அதிகாலை முதல் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், பகலில் கழுமரம் ஏற்றம் நடைபெறும். பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் மஞ்சள் நீராட்டு மற்றும் பூப்பல்லக்கில் அம்மன் நகர் வலத்துடன் விழா நிறைவடைகிறது.