பதிவு செய்த நாள்
16
பிப்
2020
04:02
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், பி.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று மாலை நடந்தது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின், பிரம்மோற்சவ விழா வரும், 27ம் தேதி துவங்கி, மார்ச், 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் பிரதான தேர் திருவிழா, மார்ச், 5ம் தேதி நடைபெறுகிறது.இவ்விழாவையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமை வகித்தார். எஸ்.பி., கண்ணன் முன்னிலை வகித்தார்.இதில், நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சி, ஹிந்து அறநிலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், தேர் செல்லும் நான்கு மாடவீதிகளின் சாலையை செப்பனிடுதல், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்துதல்.கோவிலின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கண்காணித்தல்.பார்க்கிங் வசதியை தயார்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை, வரும், 20ம் தேதிக்குள் முடிக்க, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.