பதிவு செய்த நாள்
17
பிப்
2020
10:02
மேட்டுப்பாளையம்; காரமடை மருதுாரில், மிகவும் பழமை வாய்ந்த, அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் அனுமந்தராய சுவாமி, ராமபிரானின் பக்தராக, கரம் குவித்து வணங்கும், பக்த ஆஞ்சநேயராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இங்கு ஒவ்வொரு தமிழ் மாதம், முதல் சனிக்கிழமை விழா, வெகு விமரிசையாக நடைபெறும்.மாசி மாத, முதல் சனிக்கிழமை விழாவையொட்டி, காலையில் கோவில் நடை திறந்து, அனுமந்தராய சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. பின்பு பல்வேறு காய்கறிகள் அலங்காரத்தில், ஜெயமங்கள ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உழவின் சிறப்பை உணர்த்தும் வகையில், தன்னைத் தேடி வந்து வணங்கும் பக்தர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வு வளம் பெற, காய்கறி அலங்காரம் செய்யப்பட்டதாக கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர். விழாவில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பாண்டுராஜ் பக்தி சொற்பொழிவு நிகழ்த்தினார். முத்துக்கல்லுார் மற்றும் காரமடை மேற்கு வட்டார பஜனை குழுவினரின், பக்தி பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. இவ்விழாவில் மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.