பதிவு செய்த நாள்
17
பிப்
2020
12:02
சேலம்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, ஹயக்ரீவ வித்யா யாகம் நடந்தது.
சேலம் மாவட்ட சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற அறக்கட்டளை மகளிர் குழு சார்பில், சிங்கமெத்தை அருகேவுள்ள, எஸ்.எஸ்.வி., பள்ளியில், ஹயக்ரீவ வித்யா யாகம், சத்யராம் ஆச்சாரியார் தலைமையில், நேற்று நடந்தது. ஒன்பதாம் ஆண்டாக நடந்த யாகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வழிபட்டனர். சேலம் சிவில் இன்ஜினியர் சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார், சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை மண்டல மேலாளர் கண்ணன் ஆகியோர், அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். விஜய பாரதம் தேசிய வார இதழ் ஆசிரியர் வீரபாகு பேசுகையில், எல்லாம் அவன் செயல். அவனின்றி அணுவும் அசையாது; உங்களுக்கு கொடுக்க வேண்டியதை யார் தடுத்தாலும் கிடைத்தே தீரும்; எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்ற மூன்று விஷயங்களை, வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்ளுங்கள். படிப்பை தவிர, வேலைவாய்ப்பு அளிக்கவுள்ள நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகளை கற்க வேண்டும், என்றார். தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு யாகத்தில் வைத்து பூஜித்த பேனாக்கள் வழங்கப்பட்டன. மேலும், அன்னதானத்தில் பலர் பங்கேற்றனர்.