பதிவு செய்த நாள்
18
பிப்
2020
10:02
திருப்பதி: காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோயில் பிரம்மோற்சவத்தின், 2ம் நாள் காளஹஸ்தீஸ்வரன் கோவில் கொடிமரத்தில் பல வண்ண துணிகளால் ஆன கொடிகளால் கொடியேற்றம் நடந்தது.
ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி பட்டணத்தில் காளஹஸ்தீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு, நேற்று முன்தினம் முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன், 2ம் நாள் தேவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அன்று காலை வெள்ளி அம்பாரியில் பஞ்சமூர்த்திகளான, ஞானபிரசுனாம்பிகை, சோமஸ்கந்தமூர்த்தி, விநாயகர், வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணியர், காலபைரவர் உற்சவமூர்த்திகள் மாடவீதியில் வலம் வந்தனர். பக்தர்கள் திரளாக மாடவீதியில் திரண்டு உற்சவமூர்த்திகளை வணங்கினர். அதன்பின் மாலை, 4 மணிக்கு கோவிலுக்குள் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோயில் கொடிமரத்தில் பல வண்ண துணிகளை கோர்த்து செய்த வஸ்திர மாலையை கொடிமரத்தில் ஏற்றினர். அதற்கு முன் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்து தர்பை புற்கள், வஸ்திரங்கள், மாவிலை தோரணங்கள், கட்டப்பட்டது. இதில் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு பல்லக்கு உற்சவத்தில் காளஹஸ்தீஸ்வரனும், ஞானபிரசுனாம்பிகை அம்மனும் மாடவீதியில் வலம் வந்தனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.