கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடந்தது. பழனி முருகன் கோயில் உப கோயிலான குழந்தை வேலப்பர் கோயிலில் கடந்த 9ஆம் தேதி கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து ஒரு வார காலம் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மாலை நகரில் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் குழந்தை வேலப்பர் வள்ளி, தெய்வானை சகிதமாக கோயில் பிரகாரத்தில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தேரின் முன் நேர்த்தி கடனாக ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். மலைப்பகுதியில் மிக பிரம்மாண்டமான தேரோட்ட நிகழ்வை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். தமிழகத்தில் இரு வடம் பிடித்து இழுக்கும் முதல் தேர் என்ற பெருமைக்குரியது. விழா ஏற்பாடுகளை பழனி முருகன் கோயில் தேவஸ்தானம் செய்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.