பதிவு செய்த நாள்
02
மே
2012
10:05
மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (மே 2) நடக்கிறது. இதற்காக நேற்று, 20 ரூபாய் டிக்கெட்டை, 500 ரூபாய்க்கு, கோயில் ஊழியர்கள் சிலர் விற்றதை எதிர்த்து, பக்தர்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும், 20 ரூபாய் கட்டணத்தில், பக்தர்கள் திருக்கல்யாணத்தைக் காண அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக கோயில் கவுன்டர்களில், 1,000 டிக்கெட்டுகள் மட்டும் விற்கப்படும். ஆனால் கவுன்டர்களில் விற்காமல், நேற்று கோயில் அலுவலகம் முன் விற்கப்பட்டது. காலை 6 மணி முதலே பக்தர்கள் வரிசையாக நின்றிருந்த நிலையில், சிலருக்கு மட்டும் விற்கப்பட்டு, "டிக்கெட் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அதிகாரிகளிடம் முறையிட அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால், கேட் மூடப்பட்டது. வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முயல, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பக்தர்கள் கூறியதாவது : திருக்கல்யாணத்தைக் காண, இலவச பாஸ் கிடைக்கப் பெறாதவர்களுக்கு 20 ரூபாய் கட்டணத்தில் காண டிக்கெட் விற்கப்படுகிறது. நேற்று சிலருக்கு மட்டும் விற்ற கோயில் ஊழியர்கள், மீதியுள்ள 20 ரூபாய் டிக்கெட்டை, 500 ரூபாய்க்கு விற்றனர். இது அதிகாரிகளுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இவ்வாறு பக்தர்கள் கூறினர்.
கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, ""டிக்கெட் கவுன்டர்களில் விற்கும்போது, சிலர் மொத்தமாக வாங்கி, வெளியில் கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்கவே, நேற்று அலுவலகம் முன் விற்கப்பட்டது. கூடுதல் விலைக்கு விற்ற ஊழியர்கள் குறித்து விசாரிக்கப்படும், என்றனர்.