புதுடில்லி: சபரிமலை வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தின் மீண்டும் துவங்கியது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு ஒன்பது நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தது.மேலும் பல்வேறு மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து மத சுதந்திரம் மத நம்பிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த அமர்வு தினசரி விசாரிக்கும் என ஒன்பது நீதிபதிகள் அமர்வு கூறியிருந்தது.அதன்படி ஒன்பது நீதிபதிகள் அமர்வில் விசாரணை நேற்று துவங்கியது. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.