பதிவு செய்த நாள்
19
பிப்
2020
12:02
சென்னிமலை: சென்னிமலையின் வனப்பகுதியில் உள்ள, மலங்காடு கருப்பண சாமிக்கு மது, மாமிச படையலிட்டு, பக்தர்கள் பூஜை செய்தனர்.
சென்னிமலை அருகே, எக்கட்டாம்பாளையம் கிராமம், நல்லபாளி அருகே, மலங்காடு கருப்பணசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், மழை வேண்டி அரிசி வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அரிசி வழிபாடு செய்தால் மழை பொழியும் என்பது மக்களின் நம்பிக்கை. சென்னிமலையின் தெற்கு வனப்பகுதியில் உள்ள கோவிலில், சாஸ்திர முறைப்படி குதிரை வாகனம், முனீஸ்வரர் சிலை, வேட்டை பைரவர், காவலர்கள், சர்ப்ப சிலை மற்றும் காவல் தெய்வம் அமைக்கப்பட்டுள்ளது. இரு வாரத்துக்கு முன், சிலைகளின் கண் திறப்பு நடந்தது. இதையடுத்து, 12 நாள் மண்டல பூஜை தொடங்கியது. நிறைவு நாளான நேற்று முன்தினம், தேனி, குமுளி அருவியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து, பக்தர்கள் பூஜை செய்தனர். இந்நிலையில் கருப்பணசாமிக்கு பலி பூஜை நேற்று நடந்தது. முன்னதாக வனப்பகுதியில் உள்ள, முருகப்பெருமான் மற்றும் கன்னிமார் சிலைகளுக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், கருப்பணசாமிக்கு மது வகைகள், ஆட்டுக்கறி படையலிட்டு பலி பூஜை செய்தனர். இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.