மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் வாகன நுழைவு கட்டணம்: கோயில் நிர்வாகமே வசூலிக்க முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2020 12:02
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் கோயில் நிர்வாகம் தரப்பிலேயே பக்தர்களின் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசித்திருவிழா சிவராத்திரியன்று தொடங்கி ஒரு வாரம் நடைபெறும். தேனி, திண்டுக்கல் , மதுரை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வர். விழாக்காலங்களில் பக்தர்கள் வரும் வாகனங்களின் நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமையை தனியாருக்கு வழங்கப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலாக வசூல் செய்ததால் வாகன உரிமையாளர்களுக்கும் வசூல்தாரர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனை கோயில் நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரி வந்தனர். இந்தாண்டு மாசிமகா சிவராத்திரி திருவிழா பிப். 21 ல் துவங்கி பிப். 28 வரை நடைபெறுகிறது. இந்நிலையில் விழாக்காலங்களில் வாகன நுழைவுக் கட்டணத்தை கோயில் நிர்வாகம் சார்பில் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், ’ டூவீலர்களுக்கு ரூ. 10 மற்றும் மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு தலா ரூ. 25 நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படும். கூடுதலாக வசூல் செய்தால் புகார் தெரிவிக்கலாம், என்றனர்.