பதிவு செய்த நாள்
21
பிப்
2020
11:02
உடுமலை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் சிறப்பு யாகம் நடந்தது.
உடுமலை, திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர் சன்னதியும் உள்ளது. பொதுதேர்வு வருவதையொட்டி, மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ளவும், தேர்ச்சி பெற்று, உயர்கல்வியை சரியாக தேர்ந்தெடுக்கவும் ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவருக்கு இரண்டு நாட்கள் சிறப்பு பூஜை நடந்தது.நேற்று முன்தினம், மாலையில் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு நிறைவு பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் பங்கேற்ற மாணவர்களின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து, பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில், பிரசாதம் மற்றும் ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர் படமும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில், ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் பங்கேற்று, மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.