பதிவு செய்த நாள்
21
பிப்
2020
11:02
சென்னை: வடபழநி முருகன் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி என, ஆண்டு முழுவதும் பல சிவராத்திரிகள் உள்ளன. இதில், மகா சிவராத்திரி விரதம் சிறப்பானது என, புராணங்கள் கூறுகின்றன.மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசி நாளையே, மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. ராத்திரி என்ற சொல்லுக்கு, அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள்.உயிர்கள் செயலற்று, ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.வடபழநி ஆண்டவர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, இன்று மாலை, 4:30 மணிக்கு மகா பிரதோஷ காலத்திலிருந்து, அன்று இரவு முழுவதும், நான்கு காலங்களிலும் சொக்கநாதருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.முதல் காலம், இரவு, 8:30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு, 11:00 மணிக்கும், மூன்றாம் காலம் அதிகாலை, 1:00 மணிக்கும், நான்காம் காலம் அதிகாலை, 3:00 மணிக்கும் அபிஷேகம் நடைபெறும்.
ஒவ்வொரு கால அபிஷேக வேளையில் ருத்ர பாராயணமும், அதைத் தொடர்ந்து பஜனையும் நடைபெறுகிறது. மேலும், இரவு, 8:30 மணிக்கு புவனேஸ்வரி, சீனிவாசனின் சிவ மகிமை வேத கோஷம், வீணை பாராயணம் நடக்கிறது.இரவு, 11:00 மணிக்கு வீரமணி ராஜுவின் மகன் அபிஷேக் ராஜுவின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 1:00 மணிக்கு சவிதா ஸ்ரீராமின் பஜன்ஸ் நடக்கிறது. முதல் கால பூஜை துவக்கத்தில் இருந்து அதிகாலை, 6:00 மணி வரை, ஒவ்வொரு மணி நேரமும் விதவிதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் மற்றும் அறநிலையத்துறை துணை கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.