பதிவு செய்த நாள்
21
பிப்
2020
11:02
நிலக்கோட்டை, நிலக்கோட்டை அருகே குலதெய்வம் கோயிலுக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் கிராம மக்கள் பயணத்தை துவக்கினர். மாசி சிவராத்திரி அன்று பங்காளிகள் ஒன்று சேர்ந்து தங்களது குலதெய்வ கோயிலுக்குச் சென்று தங்கி வழிபாடு நடத்துவதுவர். இரவு முழுவதும் சாமியாடுதல், குறி கேட்டல், சிறப்பு பூஜைகள், கிடா வெட்டுதல் போன்றவை நடக்கும்.
திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, விளாம்பட்டி, சித்தர்கள்நத்தம், மல்லியம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 200 குடும்பத்தினர் மதுரை, மாடக்குளம் ஈடாடி அய்யனார் கோயிலுக்கு 50 மாட்டு வண்டிகளில் நேற்று புறப்பட்டனர். பூஜாரி சுப்பிரமணியன், பெரிய தனம் முத்துப்பாண்டி, சம்சாரி சுப்பிரமணி, காவல்காரர் பாலமுருகன் ஆகியோர் சாமி பெட்டியை சுமந்தபடி சென்றனர்.ஒன்று சேர்ப்பதே பெரும்பாடுகிராமத்தினர் கூறியதாவது: குலதெய்வ வழிபாட்டுக்கு உள்ளூர், வெளியூர்களில் இருப்போரை ஒன்று சேர்ப்பதே பெரிய வேலையாக இருக்கும். கடந்த ஆண்டு சாமி கும்பிடும் போது நடந்த நிகழ்வுகளால் சிறுசிறு பிரச்னைகள் இருக்கும். எல்லாவற்றையும் சரிகட்டி ஒன்று சேர்த்து சென்று வருவதே பெரிய சுகம் தான்.முன்பெல்லாம் வாகன போக்குவரத்து இல்லாததால் மாட்டு வண்டி பயணம் மேற்கொண்டனர். தற்போது வாகன போக்குவரத்து இருந்தாலும் பழைய பாரம்பரிய முறையே மனதிற்கு சுகமளிக்கிறது. இளைஞர்களுக்கு பொழுதுபோக்காகவும், சிறுவர்களுக்கு புதிய அனுபவமாகவும், பெரியவர்களுக்கு மலரும் நினைவுகளாகவும் இருக்கும் என்றனர்.