பதிவு செய்த நாள்
21
பிப்
2020
01:02
கதக் கர்நாடக மாநிலம் கதக்கில், முஸ்லிம் இளைஞர் ஒருவர், ஹிந்துவாக லிங்க தீட்சை பெற்றுள்ளார். இதையடுத்து, பிப். 26 ல், கோருனேஸ்வரா லிங்காயத்து மடத்தின் மடாதிபதியாக, அவருக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தின் அசூடி கிராமத்தைச் சேர்ந்தவர் திவானி ஷெரீப், 32. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இவருக்கு, திருமணமாகி, நான்கு குழந்தைகள் உள்ளன. இவரது தந்தையும், தாயும் கஜுரி மடத்தின் முருகராஜேந்திரா கோருனேஸ்வரா சிவயோகி சுவாமிகளின் பக்தர்கள்.அவர்களுடன், திவானி ஷெரீப்புமும், அடிக்கடி மடத்திற்கு சென்று வருவார். இதனால் அவருக்கு ஹிந்து மதத்தின் மீதும், லிங்காயத்து சமூகத்தின் மீதும் ஈர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஹிந்து மதத்தில் இணைய முடிவு செய்தார்.இதற்கு அவரது குடும்பத்தினரும் ஒப்பு கொள்ளவே, தற்போது முருக ராஜேந்திரா கோருனேஸ்வரா சிவயோகி சுவாமிகள், ஷெரிப்புக்கு லிங்க தீட்சை வழங்கி உள்ளார். மேலும் அசூடி கிராமத்தின், கோருனேஸ்வரா சாந்திதாமா ஆசிரமத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, அசூடி கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலத்தில், கோருனேஸ்வரா மடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மடத்திற்கு ஷெரீப்பை மடாதிபதியாக்க, முருகராஜேந்திரா கோருனேஸ்வரா சிவயோகி சுவாமிகள் முடிவு செய்துள்ளார். அதன்படி, பிப். 26 ம் தேதி மடாதிபதியாக பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.இது குறித்து, முருகராஜேந்திரா கோருனேஸ்வரா சிவயோகி சுவாமிகள், கூறுகையில், 12 வது நுாற்றாண்டில் பசவண்ணர் காட்டிய வழியை பின்பற்றுபவர்கள் நாங்கள். அவரது கொள்கை படி, லிங்காயத்தில் இணைய அனைத்து மதத்தினருக்கும் அனுமதியுண்டு. ஷெரீப், மடாதிபதியாவது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.