பதிவு செய்த நாள்
22
பிப்
2020
12:02
தஞ்சாவூர் :மகா சிவராத்திரியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயில், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில்களில் நாட்டியாஞ்சலி விழா நடந்தது.மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலயங்களில் நான்கு கால சிறப்பு பூஜைகள், மாலை துவங்கி நள்ளிரவு வரை நடக்கும். பக்தர்கள் விடிய, விடிய கண் விழித்து தரிசனம் செய்வது வழக்கம். தஞ்சாவூர் பெரிய கோயிலில், நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டஷேன் சார்பில், மாலையில், நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விடிய, விடிய நடனமாடினர். 27ம் தேதி வரை நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
குபேர நாட்டியாஞ்சலி: தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீசுவரர் கோயிலில், குபேரர் நாட்டியாஞ்சலி விழா, நேற்று முன்தினம் மாலை துவங்கியது. தொடர்ந்து இரு நாட்கள் நடந்த விழாவில் தஞ்சாவூர், கும்பகோணம், ஓசூர், அரியலுார், சென்னை, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோல, திருவையாறு ஐயாறப்பர் கோயில், பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோயில்களில், நேற்று துவங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள், மூன்று நாட்களுக்கு நடக்கின்றன.