பதிவு செய்த நாள்
22
பிப்
2020
01:02
கோவை :மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பூண்டி வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது, பூண்டி வெள்ளியங்கிரி கோவில். இக்கோவில் அருகே, ஏழு மலைகளை கடந்து, மலை உச்சியில் வீற்றிருக்கும் ஈசனை தரிசிக்க கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர்.
பிப்., 11ம் தேதி முதல், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதலே, பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. பஸ், வேன்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து, மலை ஏற்றத்தில் ஈடுபட்டனர்.காணும் இடம் எல்லாம் பக்தர்கள் கூட்டம் இருந்தது. பக்தி பரவசத்துடன், பல முதாட்டிகளும் மலை ஏறினர். வனத்துறையினர், 105 பேர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிளாஸ்டிக், போதை வஸ்துகள், எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.மலைகளில் உள்ள சுனைகளில் தண்ணீர் வரத்து உள்ளதால், குடிநீர் பிரச்னை ஏற்படவில்லை என, பக்தர்கள் தெரிவித்தனர். நாளை ஞாயிறு என்பதால், இன்று இரவு மலையேற்றத்தில் ஈடுபடும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.