பதிவு செய்த நாள்
22
பிப்
2020
05:02
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
உளுந்தூர்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 16ம் தேதி காலை 7 மணி அளவில் சக்தி கரகம் வீதியுலா நடந்தது. அன்று மதியம் 1.30 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 17ம் தேதி 2ம் நாள் இரவு உற்சவம், அம்மன் வீதிஉலா நடந்தது. 18ம் தேதி மூன்றாம் நாள் உற்சவம் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. 19ம் தேதி 4ம் நாள் உற்சவம், இரவு வீதியுலா நடந்தது. 20ம் தேதி 5ம் நாள் உற்சவம், இரவு அம்மன் வீதியுலா நடந்தது. கரகாட்டம், முத்துப் பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. வள்ளாராஜன் கோட்டையில் காலை 5 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சீர்வரிசை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. 21ம் தேதி 6ம் நாள் இரவு மகா சிவராத்திரி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொலுவு இருத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. வீதியுலா நடந்தது.
இரவு 12 மணிக்கு மயானம் சென்று சக்தி உருவு கூட்டி அம்மனை அழைத்து வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று(பிப்.,22) 7ம் நாள் நோட்டக்காரர் விநாயக பத்தர் வீட்டில் இருந்து அம்மனை குடி அழைத்து வந்து பின் பூங்கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், பச்சை போட்டு பரப்பு எடுத்தலும், முக்கூட்டு கப்பறையுடன் பாவாடைராய சுவாமி, வீரபத்திர சுவாமியுடன் பத்திரகாளி அம்மன் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் மயான உத்தர வேடமணிந்து மயானம் நோக்கி புறப்பட்டுச் செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அம்மன் வள்ளாளராஜன் கோட்டை அழித்து, குடல் கவ்வி சென்று சுடுகாட்டில் மருள் அடித்து குறி சொல்லி பேய் ஒட்டி பிரசாதம் படைத்து மயான சூறை விடுதல் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவையொட்டி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.