ஒருநாள் நாடகம், திரைப்படத்துறை சார்ந்த பிரமுகர்கள் பலர் காஞ்சி மகாசுவாமிகளை தரிசிக்க வந்தனர். அப்போது நாடகம், திரைப்படம் குறித்து பேச்சு எழுந்த போது, ‘‘இப்போது நான் சொல்வது என் கருத்துக்கள் அல்ல. நாடக சாஸ்திரங்களில் கூறியுள்ள விஷயங்கள் தான். இவற்றை இயன்ற வரை பின்பற்றினால் சமுதாயத்திற்கு நன்மை உண்டாகும். தற்காலத்தில் திரைப்படம், நாடகங்களில் புராணக் கதைகளை எடுத்துச் சொல்கிறார்கள். அதை பார்ப்பவர்களுக்கு புராண ஞானம் உண்டாகலாம் என்பதையும் ஏற்கிறேன். ஆனாலும் இந்த ஞானம் சரியானதாக இருக்குமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. புராணப் படங்களைப் பார்த்தாலும் அவற்றிலுள்ள நல்லதை விட, கெட்டதே மக்களை சென்றடைகிறது. ஏனெனில் புராணக் கதையை திரைப்படமாக ஆக்கும் போது எந்த அளவுக்கு ஜனரஞ்சகமாகப் பண்ணலாம் என்று தானே யோசிக்கிறார்கள். படம் நீண்ட நாள் ஓடி அதிகம் வசூலாக வேண்டும் இல்லையா? இதனால் புராணத்தின் மூலக்கதை சிதையும் அபாயம் உண்டாகிறது. இதனால் இன்னொரு கெடுதலும் நேர்கிறது. உயர்ந்த, உத்தமமான புராணக் கதாபாத்திரங்களின் குணங்களை ரசிகர்கள் உள்வாங்காமல், குறிப்பிட்ட வேஷத்தில் நடக்கும் நடிகர்களின் குணங்களையே கிரகிக்கத் தொடங்குகிறார்கள். புராணத்தில் இடம் பெறும் உத்தம புருஷர்களின் மீது மதிப்பு கொண்ட பெரியவர்களின் சொற்பொழிவை (பிரவசனம்) கேட்டால் தான் புராணத்தில் உள்ள தர்மங்கள், நல்ல கருத்துக்களை கிரகிக்க முடியும். தாம் சொல்லும் நல்ல விஷயங்களைத் தானே பின்பற்றாத சொற்பொழிவாளர்கள் செய்யும் உபன்யாசமும் பலனளிக்காது. சாஸ்திரங்களின் வழிகாட்டுதலை பின்பற்றினால் கலைத்துறையினரும் நல்லதைச் செய்ய முடியும். நிஜ வாழ்வில் கணவன், மனைவியாக இருப்பவர்கள், தான் கதாநாயகர், நாயகியாக நடிக்கலாம் என்கிறது! சிருங்காரக் காட்சிகளில் கடுமையான கட்டுப்பாடு வேண்டும் என்றும் சொல்கிறது. கலைத்துறையினர் இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்’’ என்றார். அதன்பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார். - திருப்பூர் கிருஷ்ணன்