கருப்பசாமி கோயிலில் அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2020 10:02
துாத்துக்குடி: இளையரசனேந்தல் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் பூசாரி சின்ன கருப்பசாமி 21அரிவாள் மீது 68 முறை குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு நடந்தவாறு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து 68 கிலோ மிளகாய் வத்தல் அபிஷேகமும் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் தலைமை பூசாரி சின்ன கருப்பசாமி 21 அரிவாள்கள் மீது நடந்தும், படுத்துக் கொண்டும் பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார். அவர் குழந்தைகளை கையில் பிடித்தவாறு 21 அரிவாள்கள் மீது 68 முறை நடந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார். இதையடுத்து கோவில் பூசாரிகள் காமராஜ் , முருகேசன் ஆகியோருக்கு 68 கிலோ மிளகாய் வத்தல் அபிஷேகம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நெல்லை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.