பதிவு செய்த நாள்
25
பிப்
2020
10:02
திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மார்ச் 9 ல் மாசி தெப்ப உற்ஸவம் நடைபெறும்.
வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றதும், ராமானுஜர் பாடல் பெற்ற திருத்தலமான இக்கோயிலில், மாசி திருவிழா பிப்.,29 ல் துவங்குகிறது. இதற்காக பிப்.,28 மாலை பூர்வாங்க பூஜை, சேனை முதல்வர் புறப்பாடுடன் துவங்குகிறது. பிப்.,29 அன்று காலை 7:30 மணிக்கு பெருமாள் கல்யாண மண்டபம் எழுந்தருளல், காலை 11:00 மணிக்கு கொடியேற்றம், காப்பு கட்டுடன் துவங்குகிறது.
இரவு தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கும். தினமும் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடக்கும். மார்ச் 5ல் இரவு ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், மார்ச் 6ல் பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம், தங்கப்பல்லக்கில் வீதி உலா நடக்கும். மார்ச் 8ல் வெண்ணெய் தாழி சேவை, காலை 10:00 மணிக்கு தெப்பம் முட்டுதள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
பத்தாம் நாள் விழாவான மார்ச்9 அன்று காலை 10:15 மற்றும் இரவு 10:00 மணிக்கும் தெப்பஉற்ஸவம் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் தெப்ப உற்ஸவத்தை காண வருகை தருவர். தெப்ப விழாவன்று பக்தர்கள் விளக்கு வைத்து வழிபாடு நடத்தினால், அடுத்த ஆண்டிற்குள் வேண்டுதல் நிறைவேறிவிடும் என்பது ஐதீகம் இதற்காக, திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெற வேண்டி விளக்கு வைத்து வழிபடுவர்.
மார்ச் 10 அன்று காலை தீர்த்தவாரி, மாலை ஆஸ்தான எழுந்தருளளுடன் மாசி தெப்பத்திருவிழா நிறைவுபெறும். சிவகங்கை தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு, பக்தர்கள் வருகைக்கென சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.