பதிவு செய்த நாள்
25
பிப்
2020
11:02
மாமல்லபுரம்: தென் ஆப்ரிக்கா நாட்டில் உள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்ய, பிரமாண்டமான உக்கிர நரசிம்மர் கருங்கல் சிலையை, மாமல்லபுரம் கலைஞர்கள் வடித்தனர்.
மாமல்லபுரத்தில், சிற்பக்கூடங்கள் நிறைந்துள்ளன. சிற்பக்கலைத் தொழிலில், ஏராளமானோர் ஈடுபட்டு, கருங்கல் சிலைகள் வடிக்கின்றனர். வெளிநாடுகளில், இந்து கோவில்கள், தற்போது அதிகரிக்கும் சூழலில், இதற்கான சிலைகள், மாமல்லபுரத்தில் வடிக்கப்படுகின்றன. தென் ஆப்ரிக்க நாட்டின், டப்ளின் நகரில், உக்கிர நரசிம்மர் கோவில், பக்தி மார்க்க அமைப்பு சார்பில் அமைக்கப்படுகிறது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்ய, மாமல்லபுரம், தனியார் சிற்பக்கூடத்தில், உக்கிர நரசிம்மர் சிலை வடிக்கப்பட்டு உள்ளது. சிற்பக்கலைஞர் சி.சம்பத் மற்றும் சகோதரர்கள், இரணியன் வதை நரசிம்மரை, பத்து கைகளுடன், 10 அடி உயரம், 5 அடி அகலத்தில் என, பிரமாண்டமாக வடித்துள்ளனர். இது குறித்து, சிற்பக்கலைஞர் சம்பத் கூறியதாவது:நான், சகோதரர்கள், தொழிலாளர்கள், ஆறு மாதங்களாக, சிலை வடித்து, தற்போது முடித்தோம். இதை வடிக்க, 8 லட்சம் ரூபாய் செலவானது. கப்பலில், தென் ஆப்ரிக்காவுக்கு அனுப்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.