துாத்துக்குடி :முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா நாளை பிப்.28 கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்று அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூபம், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5:00 மணிக்கு கோயில் செப்பு கொடிமரத்தில் கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மார்ச் 3ல் ஐந்தாம் திருவிழாவன்று இரவு 7:30 மணிக்கு மேலக்கோயிலில் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது. மார்ச் 5ல் அதிகாலை 4:30 மணிக்கு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை, காலை 8:30 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் மண்டபம் வருதல் நடக்கிறது. மார்ச் 6ல் காலை சுவாமி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் வலம் வருவர். மார்ச் 8ல் பத்தாம் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் வீதிஉலா நடக்கிறது. மார்ச் 9ல் 11ம் திருவிழாவையொட்டி இரவு 10:30 மணிக்கு தெப்ப உற்ஸவம் நடக்கிறது. மார்ச் 10ல் திருவிழா நிறைவு பெறுகிறது.