பதிவு செய்த நாள்
27
பிப்
2020
10:02
செஞ்சி :மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நேற்று நடந்த தீ மிதி விழாவில், 25 ஆயிரம் பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாசி திருத்தேர் உற்சவம், 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஐந்தாம் நாள் விழாவாக, நேற்று மாலை, அங்காளம்மன் கோவில் வார வழிபாட்டு மன்றம் சார்பில், தீ மிதி விழா நடந்தது.மாலை, 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமியுடன், காப்பு கட்டிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னி குளத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். மாலை, 3:45 மணிக்கு கோவிலின் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், சேலம் மாவட்டம், ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமானந்தம் சுவாமிகள் முதலில் தீக்குண்டம் இறங்க, தொடர்ந்து, கோவில் பூசாரிகளும் பக்தர்களும் தீக்குண்டம் இறங்கினர்.ஆந்திர மாநிலம் மற்றும் சேலம், ஈரோடு, தர்மபுரி பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள், சக்தி மாலை அணிந்து, விரதமிருந்து தீக்குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். காலையில் இருந்து வரிசையில் நின்றிருந்த, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு, 9:00 மணி வரை தீ மிதித்தனர்.
முன்னதாக, சுவாமி ஊர்வலத்தின் போது, அலகு குத்தி வந்த பக்தர்கள், லாரியை இழுத்தும், பறவைக்காவடி மூலம் அம்மனுக்கு மாலை அணிவித்தும், தீபாராதனை செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.