காளாத்தீஸ்வரர் கோயில் மாசிமகம் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2020 11:02
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசிமக தேரோட்ட திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 7 ல் திருக்கல்யாணம், மார்ச் 8 ல் தேரோட்டமும் நடைபெறுகிறது. இக்கோயில் மிகவும் புராதானமானதும், பிரசித்திபெற்றதுமாகும். தென்காளஹஸ்தி என்றழைக்கப்படும் இங்கு ராகு கேது தனித்தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர். இந்தாண்டுமாசிமக தேரோட்டம் மார்ச் 8 ல் நடத்த இந்துசமயஅறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.கொடியேற்றம்: நேற்று காலை அதற்கான கொடியேற்ற நிகழ்ச்சி துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். உத்தமபாளையம் டி.எஸ்.பி. சின்னக்கண்ணு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை முதல் காளாத்தீஸ்வரரும், ஞானாம்பிகையும் சர்வஅலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது. 10:15 மணியளவில் கோயில் சிவாச்சாரியார் மணிவாசகம் , திருத்தேரோட்டத்திற்கான கொடியை, கோயில் கொடிமரத்தில் ஏற்றினார். பக்தர்கள் ஹர ஹர மகாதேவா என்ற கோஷமிட்டனர். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பணிக்குழு தலைவர் எம்.சண்முகம், திருப்பணிக்குழு உறுப்பினர்கள் செல்வம், கணேசன், ராஜேந்திரன், கர்ணம் குடும்பத்தினர் மற்றும் அனைத்து திருப்பணிக்குழு உறுப்பினர்கள், கோகிலாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். மண்டகப்படி: முதல் நாள் மண்டகப்படி பி.டி.ராசன் குடும்பத்தினர் சார்பில் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலை, மாலை ஒவ்வொரு சமூகத்தினர் சார்பில் மண்டகப்படி நடைபெறும். வெவ்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வருவார். மார்ச் 7 ல் திருக்கல்யாணம் கர்ணம் குடும்பத்தினர் மற்றும் கோகிலாபுரம் பொதுமக்கள் இணைந்து நடத்துகின்றனர். மார்ச் 8 காலை 9:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்து வருகிறது.