பதிவு செய்த நாள்
28
பிப்
2020
10:02
மொடக்குறிச்சி தலைவர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள, கோயில் கதவை அகற்றும் விவகாரம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., அமைதி பேச்சு நடத்தினார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, நஞ்சைகாளமங்களம், மன்னதாம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற குலவிளக்கு அம்மன் கோயில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.கோயில் முகப்பில், மர வேலைப்பாடுகள் கொண்ட கதவில், ஈ.வே.ரா., அன்னை தெரசா, அண்ணாதுரை, முன்னாள் பிரதமர் நேரு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என, 28 தலைவர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மொடக்குறிச்சி ஒன்றிய தெற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலசுப்பிரமணியத்திடம் மனு அளித்தனர்.அதில், ஹிந்து சமய ஆகம விதிகளுக்கு முரணாக, கோயில் கதவில் உள்ள தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும் என, தெரிவித்திருந்தனர்.இது குறித்த அமைதி பேச்சு, குலவிளக்கம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. ஈரோடு, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணியினர், பா.ஜ.,வினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஆர்.டி.ஓ., முருகேசன் கூறுகையில், மக்களின் கோரிக்கையை ஏற்கிறேன். மனுவாக எழுதி கொடுத்தால், கலெக்டர், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் காண்பித்து, உரிய தீர்வை ஏற்படுத்துவோம், என்றார்.