பதிவு செய்த நாள்
28
பிப்
2020
11:02
கிருஷ்ணகிரி: மயான கொள்ளை திருவிழாவையொட்டி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த, 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
22ல் மஹா சிவராத்திரி விழாவும், 23ல் அம்மன் பூத வாகனத்தில் மயான கொள்ளைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடந்தது. 26ல் அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், சிறப்பு யாகம் வளர்த்து சிவன், பார்வதிக்கு கங்கணம் கட்டி, மாலை மாற்றி திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்து, சிறப்பு அலங்காரத்தில் பார்வதி சமேதராக சிவன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தட்டுவரிசைகளை திருமணத்துக்கு சீர்வரிசையாக வழங்கினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. நேற்று இரவு, 8:00 மணிக்கு கும்ப பூஜை மற்றும் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் பருவதராஜகுல மீனவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.