பதிவு செய்த நாள்
01
மார்
2020
07:03
ரியாத்: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் ஆன்மிக நோக்கங்களுள் முக்கியமானது, வாழ்வில் ஒருமுறையேனும், மெக்கா மெதினா செல்ல வேண்டும் என்பது தான். ஆண்டுதோறும் இந்த ஹஜ் புனித யாத்திரைக்காக, உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள், அரபு நாட்டுக்கு செல்வர். இந்நிலையில், கொரோனா வைரசால் மேற்காசிய நாடுகளில், 220க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வெளிநாட்டவர் மெக்கா மெதினா புனிதத் தலங்களுக்கு வரத் தற்காலிக தடை விதிப்பதாக, சவுதி அரேபிய வெளிவிவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெரும் உயிர்ப்பலி
கடந்த 1821-ம் ஆண்டு பரவிய காலரா நோயால், ஹஜ் புனித யாத்திரை வந்த 21,000 பயணிகள் பலியாகியுள்ளனர். 1865-ல் காலரா நோய்க்கு, 15,000 ஹஜ் பயணிகள் பலியாகினர். மெர்ஸ்- கொரோனா எனப்படும் ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ் தாக்கி, 2012-ம் ஆண்டு, 2,500 ஹஜ் பயணிகள் பாதிக்கப்பட்டனர். அதில், 858 பேர் பலியாகினர் என, உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக, மத்திய கிழக்கு நாடுகளில், ஈரானில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது. அண்டை நாடான ஈரானில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், அரபு நாட்டின் மெக்கா மெதினா உள்ளிட்ட புனிதத் தலங்களில் நோய் பரவுதல் பேராபத்தையும் பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக் கூடும். இந்த அச்சத்தால் சவுதி அரேபிய அரசு, இந்த முடிவை எடுத்துள்ளது.